Breaking News

சுற்றுலாப் பயணிகள் பின்பற்ற வேண்டிய அறிவுறுத்தல்களை வெளியிட்டது சுகாதார அமைச்சு

சுற்றுலாப் பயணிகள் பின்பற்ற வேண்டிய அறிவுறுத்தல்களை வெளியிட்டது சுகாதார அமைச்சு

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வருகைதரும் சுற்றுலாப் பயணிகள் பின்பற்ற வேண்டிய அறிவுறுத்தல்களை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.

இதற்கமைய, இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் கொரோனா தொற்றுக்கான காப்புறுதியை பெற்றிருக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அத்துடன் விடுதிகளை பதிவு செய்யும்போது, விமான பயணச்சீட்டினை கொள்வனவு செய்யும்போது காப்புறுதியினை பெற வேண்டும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

மேலும், விமான நிலையங்களுக்கு வருகை தருவதற்கு 96 மணித்தியாலங்களுக்கு முன்னர், அங்கீகரிக்கப்பட்ட ஆய்வுகூடங்களில் பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், நாட்டுக்கு வரும் சுற்றுலாபயணிகள், இரண்டு வார கால பகுதிக்குள் 3 பி.சி.ஆர். பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குறித்த பி.சி.ஆர். பரிசோதனைகள் ஒரே மருத்துவ கூடத்தினால் நடத்தப்பட்டிருக்க வேண்டுமெனவும் சுகாதார அமைச்சினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் அங்கீகரிக்கப்பட்ட விடுதிகளில் மாத்திரமே தங்குவதற்கு அனுமதியளிக்கப்படுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோன்று, நாட்டிக்கு வருகைதரும் சுற்றுலா பயணிகளுக்கு முதல் 02 வாரங்களில், வெளியில் நடமாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.