Breaking News

சிம்பு என்னை ரொம்பவே நம்பினார் - நெகிழ்ந்துபோன விக்னேஷ் சிவன்...!!

சிம்பு என்னை ரொம்பவே நம்பினார் - நெகிழ்ந்துபோன விக்னேஷ் சிவன்...!!

போடா போடி படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். முதல் படத்திலேயே சிம்புவை ஹீரோவாக கமிட்டாக்கி கவனம் ஈர்த்தார். அதேபோல் சரத்குமாரின் மகள் வரலட்சுமி, நடிகை ஷோபனா என பெரிய ஸ்டார் வேல்யூவுடன் படம் உருவானது. ஸ்டார் வேல்யூ மட்டுமின்றி கதை ரீதியாகவும் சிறப்பாக அமைந்தது. ஆனால் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

தற்போது எல்ஐசி என்ற படத்தை அவர் இயக்கி வருகிறார். லலித் படத்தை தயாரிக்க இதில் பிரதீப் ரங்கநாதன், எஸ்.ஜே.சூர்யா, கீர்த்தி ஷெட்டி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் இதில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. கண்டிப்பாக இந்தப் படத்தை ஹிட் படமாக கொடுத்து தரமான கம்பேக் கொடுக்க வேண்டும் என்பதில் விக்னேஷ் தெளிவாக இருக்கிறார்.

இந்நிலையில் அவர் சிம்பு குறித்து அளித்த ஒரு பேட்டியில், "சிம்புவிடம் போடா போடி கதையை 2008ஆம் ஆண்டு சொன்னேன். அந்தக் கதை சிம்புவுக்கு பிடித்தது. ஆனால் அப்போது அவர் சில படங்களில் பிஸியாக இருந்தார். இதனால் போடா போடி படத்தின் ஷூட்டிங் தொடங்க தாமதமானது. அந்த சமயத்தில் விண்ணைத்தாண்டி வருவாயா படம் வெளியாகி நல்ல ஹிட்டடித்தது.

அந்தப் படம் வெளியான ஒரு சில நாட்களிலேயே சிம்பு என்னை அழைத்து போடா போடி ஷூட்டிங்கை தொடங்க சொன்னார். அப்போது, நான் சமீபகாலமாக நிறையவே ரொமாண்ட்டிக் படங்களில் நடித்துவருகிறேன். இருந்தாலும் உன் மீது நம்பிக்கை இருக்கிறது. கண்டிப்பாக வித்தியாசமான ஒரு படமாக போடா போடி எனக்கு அமையும். அதுமட்டுமில்லாமல் உனது டைரக்‌ஷனில் நடிக்கிறேன் என்று வாக்கும் கொடுத்திருக்கிறேன். வா பண்ணலாம் என்று நம்பிக்கையாக கூறினார். அவர் என் மீது ரொம்பவே நம்பிக்கை வைத்திருந்தார்" என்றார்.