Breaking News

சிறுநீரகத்தை பாதுகாப்பதற்கு கைகொடுக்கும் 10 விடயங்கள்

சிறுநீரகத்தை பாதுகாப்பதற்கு கைகொடுக்கும் 10 விடயங்கள்

மனித உறுப்புகளில் மிக மென்மையானவை சிறுநீரகங்கள். உடலில் முக்கியமான செயல்பாடுகள் அவைகளால் நடக்கின்றன. அவற்றின் செயல்பாடு முடங்கும் போது வாழ்க்கையே முடங்கி விடும். சிறுநீரகங்களின் ஆரோக்கியத்திற்காக கடைப்பிடிக்க வேண்டிய முக்கியமான வழிமுறைகள் இவையாகும்.

உடல் தகுதியை மேம்படுத்துங்கள். தினமும் அரை மணி நேரமாவது உடற்பயிற்சி செய்து ஒட்டுமொத்த உடலின் ஆரோக்கியத்தையும் கட்டிக் காத்திடுங்கள். நடைப்பயிற்சி போன்ற ஏதாவது ஒன்றை தினமும் செய்யுங்கள்.

இரத்தத்தில் குளுக்கோஸ் அளவை எப்போதும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருங்கள். நீரிழிவு நோய் இருப்பவர்களில் 30 சதவீதம் பேருக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.

 அதனால் நீரிழிவு நோயாளிகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் டொக்டரை சந்தித்து சிறுநீரகத்தின் செயல்பாடுகளை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

இரத்த அழுத்தம் அதிகரிக்காமல் கவனிக்க வேண்டும். இரத்த அழுத்தத்திற்கான மருந்தினை தவறாமல் உட்கொள்வது அவசியம். உயர்இரத்த அழுத்தத்தினால் இதய பாதிப்பு, பக்கவாதம் போன்றவை உருவாகும் என்பது பலருக்கும் தெரியும். ஆனால் அது சிறுநீரக பாதிப்பையும் ஏற்படுத்தும் என்பது பெரும்பாலானவர்களுக்கு தெரிவதில்லை. அதனால் எப்போதும் இரத்த அழுத்தத்தை சீராக வைத்திருங்கள்.

ஆரோக்கியமான உணவினை சாப்பிடுங்கள். உப்பின் அளவை முடிந்த அளவு குறைத்திடுங்கள்.

ஊறுகாய், பப்படம், உப்பு சேர்த்த பாலாடைக்கட்டி, கருவாடு போன்றவைகளை குறையுங்கள். பக்கெட்டுகளில் விற்கும் உணவுப் பொருட்களையும் உட்கொள்ள வேண்டாம்.

தினமும் மூன்று லீட்டர் வரை தண்ணீர் பருகுங்கள். அதிகமாக தண்ணீர் பருகினால் உடலில் சேரும் சோடியம், யூரியா போன்ற நச்சுப் பொருட்கள் சிறுநீர் வழியாக வெளியேறி விடும்.

சிறுநீரகக்கல் தொந்தரவு கொண்டவர்கள் அதிகமாக தண்ணீர் பருகுவதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். அவர்கள் மருத்துவ ஆலோசனை பெற்று, மேலும் சிறுநீரக கற்கள் உருவாகாமல் இருப்பதற்கான உணவு முறையை மேற்கொள்வது அவசியம்.

புகை பிடிப்பதை தவிர்த்திடுங்கள். புகை பிடித்தால் சிறுநீரகத்துக்கு செல்லும் இரத்த ஓட்டம் தடைப்படும்.

குறிப்பிட்ட சில வலி நிவாரண மாத்திரைகளும், நுண்ணுயிர் கொல்லி மருந்துகளும் சிறுநீரகத்தை பாதிக்கும். அளவுக்கு அதிகமாக வலி நிவாரண மாத்திரைகளை உட்கொள்ளாதீர்கள்.

 டொக்டரின் ஆலோசனைப்படி தேவைக்கு மட்டும் அவைகளை உட்கொள்ளுங்கள். சிறுநீரக நோய் இருப்பவர்கள் வலி நிவாரண மாத்திரைகளை உட்கொள்ளும் முன்பு டொக்டரின் ஆலோசனையை பெற்றுக் கொள்ளுங்கள்.

உடல் எடையை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருங்கள். அதிக எடை இருந்தால் அது சிறுநீரகத்திற்கு ஆபத்தாக முடியலாம். பரம்பரை ரீதியாக சிறுநீரக நோய் இருப்பவர்கள் அதிக கவனம் காட்டவேண்டும்.

 அவ்வப்போது தேவையான மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்வது அவசியம் சிறுநீரக தொந்தரவு இருப்பவர்கள் உணவில் புரதத்தின் அளவை கட்டுப்படுத்த வேண்டும். மாமிச உணவுகளில் புரதம் அதிகம் இருக்கிறது.