Breaking News

ஸ்டாலின் பாணியில் எடப்பாடி பிரச்சாரம் - திருப்பத்தூர் அதிமுகவினர் உற்சாகம்...!!

ஸ்டாலின் பாணியில் எடப்பாடி பிரச்சாரம் - திருப்பத்தூர் அதிமுகவினர் உற்சாகம்...!!

இந்தியா: தமிழ்நாடு

அரக்கோணம், வேலூர், திருவண்ணாமலை மக்களவை தொகுதிகளில் அதிமுக கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி நேற்றும், இன்றும் (செவ்வாய்கிழமை) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
 
அரக்கோணம், வேலூர் மக்களவை தொகுதியில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து நேற்று (திங்கள்கிழமை) தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்றிரவு திருப்பத்தூர் - கிருஷ்ணகிரி சாலையில் உள்ள முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணிக்கு சொந்தமான நட்சத்திர வடுதியில் தங்கினார். இதையடுத்து, இன்று மாலை 4 மணியளவில் தேர்தல் பிரச்சாரம் செய்ய இருந்த எடப்பாடி பழனிசாமி கட்சி நிர்வாகிகளை இன்று காலை சந்தித்து தேர்தல் தொடர்பான ஆலோசனை மேற்கொண்டார்.

அப்போது, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காலை நேரங்களில் அந்தந்த பகுதிகளில் உள்ள காய்கறி மார்க்கெட், வாரச்சந்தை, உழவர் சந்தை போன்ற பகுதிகளுக்கு நேரில் சென்று அங்குள்ள மக்களிடம் நலம் விசாரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வதை போல எடப்பாடி பழனிசாமியும் மார்க்கெட் பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் செய்ய வேண்டும் என அதிமுகவினர் யோசனை தெரிவித்தனர்.

இதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்ட எடப்பாடி பழனிசாமி உடனடியாக நட்சத்திர விடுதியில் இருந்து புறப்பட்டு திருப்பத்தூர் சக்தி நகர் பகுதியில் உள்ள தினசரி காய்கறி மார்க்கெட் பகுதிக்கு வந்தார். அப்போது, அங்கு காய்கறி, கீரை உள்ளிட்ட உணவு வகைகளை வாங்க வந்த மக்களிடம் அவர் நலம் விசாரித்தார்.

முதன்முறையாக காய்கறி மார்க்கெட்டில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பார்த்ததும் அங்கிருந்த வியாபாரிகள், பொதுமக்கள் ஆச்சரியப்பட்டனர்.

பிறகு, ஒவ்வொரு கடையாக சென்று தி.மலை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் கலியபெருமாளுக்கு அவர் வாக்கு சேகரித்தார். தக்காளி கடைக்கு சென்ற எடப்பாடி பழனிசாமி ஒரு கிலோ தக்காளி என்ன விலை? என வினவினார். அதற்கு கிலோ ரூ.30க்கு விற்பனை செய்கிறோம் என வியாபாரி கூறியதை கேட்ட எடப்பாடி பழனிசாமி வியாபாரிகளிடம் என்ன விலைக்கு தக்காளி கொள்முதல் செய்கிறீர்கள்? என கேட்டார்.

பிறகு, அங்கிருந்து வெளியே வந்த எடப்பாடி பழனிசாமி அங்கிருந்த மக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரித்தார். அப்போது, முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர். இதைதொடர்ந்து, இன்று மாலை 4 மணிக்கு திருப்பத்தூரில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் குடியிருப்புப்பகுதியில் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரம் செய்ய உள்ளார்.