Breaking News

“இயேசுவை தவறாக சித்தரிக்க எனக்கு கனவிலும் வராது” - விஜய் ஆண்டனி விளக்கம்...!!

“இயேசுவை தவறாக சித்தரிக்க எனக்கு கனவிலும் வராது” - விஜய் ஆண்டனி விளக்கம்...!!

“திராட்சை ரசம் என்ற பெயரில் யேசுவும் குடித்துள்ளார்” என விஜய் ஆண்டனி பத்திரிகையாளர் சந்திப்பில் பேசியதாக செய்திகள் வெளியானது. இதற்கு கிறிஸ்துவ அமைப்பு கண்டனம் தெரிவித்தது. தற்போது இந்த சர்ச்சை தொடர்பாக விஜய் ஆண்டனி விளக்கம் அளித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், “அன்பார்ந்த கிறிஸ்தவ சபை கூட்டமைப்பின்‌ உறுப்பினர்களே, வணக்கம்‌. நான்‌ முன்தினம்‌ ஒரு பத்திரிக்கையாளர்‌ சந்திப்பில்‌, திராட்சை ரசம்‌ தற்போது கண்டுபிடிக்கப்பட்டது அல்ல, இரண்டாயிரம்‌ வருடங்களுக்கு முன்னதாகவே புழக்கத்தில்‌ இருந்ததுதான்‌. தேவாலயங்களிலும்‌ பயன்படுத்தப்பட்டது.

இயேசு பிரான்‌ பயன்படுத்தி இருக்கிறார்‌ என்று கூறி இருந்தேன்‌. ஒரு பத்திரிக்கை நண்பர்‌ என்னிடம்‌ கேட்ட சில கேள்விகளைத்‌ தொடர்ந்து, நான்‌ பேசியதை இணைத்து, தவறாக அர்த்தபடுத்தியதால்‌, உங்களைப்போன்ற சிலர்‌ மனம்‌ புண்‌ பட்டிருக்கிறீர்கள்‌ என்பது, எனக்கு வேதனை அளிக்கிறது. நான்‌ தவறாக எதுவும்‌ சொல்லவில்லை.

நீங்களும்‌ தவறாக புரிந்து கொள்ள வேண்டாம்‌.மக்களுக்காக ரத்தம்‌ சிந்தி உயிர்‌ நீத்த, மதங்களுக்கு அப்பாற்ப்பட்ட இயேசுவைப்பற்றி தவறாக சித்தரிக்க எனக்கு கனவிலும்‌ வராது” என தெரிவித்துள்ளார்.

விஜய் ஆண்டனி, மிருணாளினி ரவி நடிப்பில் ‘ரோமியோ’ திரைப்படம் ரம்ஜான் பண்டிகைக்கு வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு அண்மையில் நடந்தது. படத்தில் நாயகி மது அருந்துவது போல வெளியாகி இருந்த போஸ்டர் பற்றி விஜய் ஆண்டனியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு விஜய் ஆண்டனி, “குடிப்பது தவறுதான். ஆண், பெண் என யார் குடித்தாலும் தவறுதான். நம் நாட்டில் நீண்ட காலமாகவே குடி உள்ளது. திராட்சை ரசம் என்ற பெயரில் ஜீசஸ் கூட குடித்துள்ளார்” எனப் பேசியதாக செய்திகள் வெளியிடப்பட்டன. இதற்கு தமிழ்நாடு கிறிஸ்தவ சபைகளின் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

அந்தக் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘உலகெங்கும் வாழும் அனைத்து கிறிஸ்தவ பெருமக்களாலும் ஜாதி மதத்துக்கு அப்பாற்பட்டு அனைத்து தரப்பினராலும் போற்றப்படக்கூடியவர் தேவகுமாரனாகிய இயேசு கிறிஸ்து.

கிறிஸ்துவர்களையும் இயேசு கிறிஸ்துவையும் இழிவுபடுத்தும் விதமாக எந்த ஆதாரம் இல்லாமல் திராட்சை ரசத்தை போதை வஸ்துவுடன் ஒப்பிட்டு, ‘இயேசு கிறிஸ்து மது குடித்தார்’ என பொதுவெளியில் பேசி மாபெரும் கிறிஸ்தவ சமூகத்தினரின் மனதை புண்படுத்திய நடிகர் விஜய் ஆண்டனி பொதுவெளியில் மன்னிப்புக் கேட்க வேண்டும். இல்லையெனில் அவர் வீட்டின் முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.