இந்தியா: தமிழ்நாடு
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள அவரது வீட்டில் வசித்து வருகிறார். அவர் முதல்வருக்கு ஒதுக்கப்படும் பங்களாவில் வசிக்கவில்லை.
இந்நிலையில் முதல்வர் ஸ்டாலினின் மகனான உதயநிதி தனது தந்தையுடனே வசித்து வருகிறார். அண்மையில் உதயநிதி அமைச்சரானார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்றதில் இருந்து தினசரி அவரையும் அதிகாரிகள் தினசரி வந்து சந்திக்கிறார்கள்.
கட்சி நிர்வாகிகள் தினமும் வந்து பார்க்கிறார்கள். எனவே அந்த பகுதியில் இட நெருக்கடி ஏற்படுகிறது.
எனவே அமைச்சர்களுக்காக அரசு வழங்கும் பங்களாவில் குடியேற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முடிவு செய்துள்ளார். அதன்படி ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அரசு பங்களாவில் குடியேற போகிறாராம். அவருக்காக கிரீன்வேஸ் சாலையில் உள்ள குறிஞ்சி என்ற அரசு பங்களா புதுப்பிக்கப்பட்டு வருகிறது.
இந்த பங்களாவில் இதுவரை சபாநாயகர் அப்பாவு வசித்து வந்தார். கடந்த ஜனவரியில் அவர் அந்த பங்களாவின் அருகில் உள்ள மலரகம் என்ற பங்களாவுக்கு மாறிச்சென்றார்.
தற்போது குறிஞ்சி பங்களா வேகமாக புதுப்பிக்கப்பட்டு வண்ணம் பூச்சப்பட்டு தயாராகி வருகிறது. அடுத்த மாதம் ஏப்ரலில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அந்த அரசு பங்களாவுக்கு குடும்பமாகச் சென்று குடியேற போகிறாராம்.
கடந்த தி.மு.க. ஆட்சியில் துணை முதல்-அமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலின் இந்த குறிஞ்சி பங்களாவில்தான் குடியிருந்தார். இந்நிலையில் அப்பாவை போலவே உதயநிதி ஸ்டாலினும் குறிஞ்சி பங்களாவில் குடியேறப்போகிறார்.
அண்ணாமலைபுரம் கிரீன்வேஸ் சாலையில் உள்ள அரசு பங்களாக்களில் தான் அனைத்து அமைச்சர்களும் தங்கி உள்ளனர்.
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியும் இங்கு தான் வசித்து வருகிறார்.