Breaking News

தலைக்கேறிய ஜாதி வெறி;"கோயிலுக்கு வந்தால் கொல்வேன்” - தலித் இளைஞரை தாக்கிய திமுக நிர்வாகி கைது..!!

தலைக்கேறிய ஜாதி வெறி;"கோயிலுக்கு வந்தால் கொல்வேன்” - தலித் இளைஞரை தாக்கிய திமுக நிர்வாகி கைது..!!

இந்தியா: தமிழ்நாடு

சேலம் மாவட்டம் திருமலைகிரி மாரியம்மன் கோவிலுக்கு பட்டியல் சமூகத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் நுழைந்ததற்காக அவரை தி.மு.க ஒன்றிய செயலாளர் டி.மாணிக்கம் தகாத வார்த்தைகளால் பேசி மிரட்டல் விடுத்தார்.

இந்நிலையில் கட்சி கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் டி.மாணிக்கத்தை தற்காலிகமாக நீக்கி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து திமுக நிர்வாகி மாணிக்கம் மீது நடவடிக்கை எடுக்க பாதிக்கப்பட்ட இளைஞர் பிரவீன் குமார் இரும்பாலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அதில் தெரிவித்துள்ளதாவது..

நான் ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்தவர். நான் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகிறேன்.

எங்கள் ஊரில் அரசுக்கு சொந்தமான பெரிய மாரியம்மன் கோவில் உள்ளது. அதற்கு ஊர் மக்கள் சார்பில் திருவிழாவிற்கான ஏற்பாடு நடந்து வந்தது. இந்நிலையில் கடந்த 26 ஆம் திகதி அன்று இரவு 8:30 மணியளவில் அந்த மாரியம்மன் கோவிலுக்கு சென்று வழிபட்டு விட்டு வெளியே வந்த போது அங்கே அமர்ந்திருந்த வெங்கடாசலம் மற்றும் கூலைகவுண்டர் என்று அழைக்கப்படும் இருவரும் என்னை பார்த்து நீ ஏன்டா கோவிலுக்குள் சென்றாய் உங்களை எல்லாம் உள்ளே வரக்கூடாது என்றும் கூறி அடிக்க வந்தனர்.

மேலும் உன்னை காலையில் பார்த்துக் கொள்கிறோம் என்று மிரட்டினார்கள். அதன்பின் 27 ஆம் திகதி அன்று காலை சுமார் 8:30 மணியளவில் பெரிய மாரியம்மன் கோவில் வாசாலுக்கு திமுகவை சேர்ந்த ஒன்றிய செயலாளர் மாணிக்கம் என்பவர் என்னை அழைத்து வரச் சொன்னதாக கூறி எங்கள் ஊரை சேர்ந்த சிலர் அழைத்துச் சென்றனர்.

கோவில் வாசலில் திமுக ஒன்றிய செயலாளர் மாணிக்கம், வெங்கடாசலம், கூலைகவுண்டர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டவர்கள் இருந்தனர். என்னை பார்த்த உடன் அங்கே இருந்த திமுக ஒன்றிய செயலாளர் மாணிக்கம் அவர்கள் தகாத வார்த்தைகளால் பேசி உன்னை யாருடா கோவிலுக்குள் போகச் சொன்னது.

மேளம் அடிக்கும் நாய்கள் நீங்கள் கோவிலுக்குள் வரக்கூடாது என்று எத்தனை முறை சொல்வது என்று திட்டி என் நெஞ்சில் தாக்கினார்.

இனி கோவிலுக்குள் நுழைந்தால் கொலை செய்து விடுவோம் என்றும் மிரட்டினார்கள்.

சாதியை காரணமாக வைத்து அரசுக்கு சொந்தமான கோவிலில் என்னையும் என் சாதி சமூகத்தையும் நுழையக்கூடாது என்று கொலை மிரட்டல் விடுத்த திமுக ஒன்றிய செயலாளர் மாணிக்கம், வெங்கடாசலம், கூலைகவுண்டர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோர் மீது நடவடிக்கை எடுக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து மாணிக்கம் உட்பட 10க்கும் மேற்பட்டோரை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்த பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.