நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டிருந்த பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை 4 மணியுடன் பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்படும் என இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்திருந்தார்.
நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டிருந்த பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்ட போதிலும், மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு முன்னரை போன்றே அமுலில் இருக்கும் என சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் டொக்டர் அசேல குணவர்தன தெரிவிக்கின்றார்.
மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு, எதிர்வரும் ஜுலை மாதம் 5ம் திகதி வரை அமுலில் இருக்கும் என அவர் கூறுகின்றார்.
அதேவேளை , பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ள போதிலும், பொது போக்குவரத்து சேவைகள் மாகாணங்களுக்கு இடையில் மாத்திரமே செயற்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவிக்கின்றார்.
மாகாண எல்லைகளை தாண்டி அத்தியாவசிய சேவைகளுக்காக சில பொது போக்குவரத்துக்களை ஈடுபடுத்துவது தொடர்பில் தற்போது கலந்துரையாடப்பட்டு வருவதாகவும் அவர் கூறுகின்றார்.
மேலும் இந்த நிலையில், எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மாகாணங்களுக்கு இடையில் பொது போக்குவரத்து சேவைகளை ஆரம்பிப்பது தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.