Breaking News

ஜெயிலர் ரிலீஸ் ஆகும் நேரத்தில் இமயமலை புறப்பட்டார் நடிகர் ரஜினிகாந்த் - என்ன காரணம்..?

ஜெயிலர் ரிலீஸ் ஆகும் நேரத்தில் இமயமலை புறப்பட்டார் நடிகர் ரஜினிகாந்த் - என்ன காரணம்..?

நடிகர் ரஜினிகாந்த், தான் நடிக்கும் ஒவ்வொரு படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் இமயமலைக்கு பயணிப்பது வழக்கம். உடல்நலக்குறைவு காரணமாக 2010-ம் ஆண்டுக்கு பிறகு இமயமலை பயணத்தை அவர் தவிர்த்து வந்தார்.

2018-ம் ஆண்டில் 'காலா', '2.0' படங்களின் படப்பிடிப்பு முடிந்ததும் இமயமலைக்கு சென்றார். அதன்பிறகு கொரோனா சூழல் காரணமாக பயணத்தை தவிர்த்து வந்தார். இதனிடையே, நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள 'ஜெயிலர்' படம் நாளை ரிலீஸ் ஆக உள்ளது.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் இன்று இமயமலை புறப்பட்டு சென்றுள்ளார். போயஸ் கார்டனில் உள்ள தனது வீட்டில் இருந்து விமான நிலையம் சென்ற நடிகர் ரஜினிகாந்த் விமானம் மூலம் அங்கிருந்து இமயமலை செல்கிறார்.

இமயமலை செல்வதற்கு முன் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் கூறுகையில், கொரோனா காரணமாக இமயமலை செல்ல முடியாமல் இருந்தது. தற்போது 4 ஆண்டுகளுக்கு பின் இமயமலைக்கு செல்கிறேன்' என்றார்.

ஜெயிலர் திரைப்படம் எப்படி உள்ளது? படத்தில் நடித்ததில் உங்கள் அனுபவம் எப்படி உள்ளது? என செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த நடிகர் ரஜினிகாந்த், படத்தை நீங்கள் பார்த்துவிட்டு கூறுங்கள்' என்றார்.