தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான தமன்னா, ரஜினிகாந்த், சிரஞ்சீவி ஆகிய 2 சூப்பர் ஸ்டார்களுடன் நடித்துள்ள படங்கள் திரைக்கு வரும் மகிழ்ச்சியில் இருக்கிறார். ரஜினியுடன் ஜெயிலர் படத்தில் காவாலயா பாடலுக்கு தமன்னா ஆடிய நடனம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.
இந்நிலையில், சமீபத்தில் கேரள மாநிலம் கொல்லத்தில் ஷாப்பிங் மால் திறப்பு விழாவுக்கு தமன்னா சென்றிருந்தார். இதையறிந்த ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. அவரை சுற்றி பாதுகாப்புக்கு பவுன்சர்கள் இருந்தாலும் ரசிகர்கள் அவரை காண முட்டி மோதினர். இதற்கிடையில் ஒரு எதிர்பாராத சம்பவம் நடந்தது. பவுன்சர்கள் இருந்தபோது, ரசிகர் ஒருவர் அவர்களைக் கடந்து வந்து தமன்னாவின் கையைப் பிடித்தார். இதனால் தமன்னாவும், பவுன்சர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.
பவுன்சர்கள் ரசிகரை ஓரமாக இழுக்க முயன்றனர். ஆனால் இங்குதான் தமன்னா தனது நல்ல உள்ளத்தைக் காட்டினார். ரசிகரின் உற்சாகத்தைப் புரிந்து கொண்ட தமன்னா அந்த ரசிகரை எதுவும் செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தினார். பின்னர் அந்த ரசிகரிடம் கைகுலுக்கினார். அதன் பிறகு ஜாலியாக செல்பியும் எடுத்துக்கொண்டார். இதனால் அந்த ரசிகர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. மகிழ்ச்சியில் கத்திக்கொண்டே சென்றார். தற்போது இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. தமன்னாவின் நல்ல உள்ளத்தை பாராட்டி ரசிகர்களும் நெட்டிசன்களும் கமெண்ட்ஸ் மழை பொழிந்து வருகின்றனர்.