Breaking News

நாகையில் வெடித்த பாஜக-காங்கிரஸ் மோதல் - பிபிசி ஆவணப்படத்தை பாதியில் நிறுத்திய போலீஸ்...!!

நாகையில் வெடித்த பாஜக-காங்கிரஸ் மோதல் - பிபிசி ஆவணப்படத்தை பாதியில் நிறுத்திய போலீஸ்...!!

இந்தியா: தமிழ்நாடு

கடந்த 2002 ஆம் ஆண்டு குஜராத்தில் நடைபெற்ற மதக் கலவரத்தில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தார்கள். ஏராளமான பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார்கள்.

இந்த மத வன்முறை உலகைளவில் அதிர்வுகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாக பிரிட்டன் அரசின் விசாரணை ஆணையத்தின் அறிக்கையை வைத்து பிரபல ஆங்கில தொலைக்காட்சியான பிபிசி, "இந்தியா: தி மோடி குவெஸ்டீன்" என்ற பெயரில் ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், பிரதமர் மோடியின் பங்கு குஜராத் கலவரத்தின் பின்னணியில் இருப்பதாக கூறப்பட்டு இருப்பது பாஜகவினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

2 பாகமாக வெளியாகியுள்ள இந்த ஆவணப் படத்திற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளதால் யூடியூப், பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்கள் மற்றும் தொலைக்காட்சியில் ஒளிபரப்படவில்லை.

இந்த ஆவணப் படத்தை ஒளிபரப்ப பல்வேறு எதிர்ப்புகள் காணப்படுகின்ற நிலையில் நேற்று நாகப்பட்டினத்தின் அபிராமி சன்னதி திடலில் இருக்கு காங்கிரஸ் அலுவலகம் முன் இந்த ஆவணப்படம் திரையிடப்பட்டது.

காங்கிரஸ் கட்சியினர், பொதுமக்கள், மாணவர்கள், பெண்கள் என ஏராளமானோர் திரண்டு நின்று இந்த ஆவணப் படத்தை பார்வையிட்டனர்.

இதனை அறிந்து அங்கு வந்த பாஜகவினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தகராறில் ஈடுபட்டனர்.

பிபிசி ஆவணப்படத்தை இங்கு திரையிடக் கூடாது என்று காங்கிரஸ் கட்சியினரை பாஜகவினர் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதமும் தள்ளுமுள்ளும் ஏற்பட்டது.

இதனை அறிந்து அங்கு வந்த பொலிஸார் மோதலை தடுத்து நிறுத்தி பாஜகவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின்னர் ஆவணப்படம் திரையிடல் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.