நியூசிலாந்தில், தேர்தலில் வாக்களிக்கும் வயது 18 ஆக இருக்கின்ற நிலையில் தேர்தலில் வாக்களிக்கும் வயது தொடர்பான வழக்கு ஒன்றில் தீர்ப்பு அளித்த உச்ச நீதிமன்றம், 16 மற்றும் 17 வயதுக்கு உட்பட்டவர்களை வாக்களிக்க அனுமதிக்காதது வயது பாகுபாடு என தீர்ப்பு அளித்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியானதை அடுத்து நேற்று முன்தினம் இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் கூறியதாவது....
நாடு முழுவதும் தேர்தலில் வாக்களிக்கும் வயதை 18ல் இருந்து 16 ஆக குறைப்பது குறித்து, நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்படும்.
இதில், உறுப்பினர்கள் தெரிவிக்கும் முடிவை பொறுத்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தனிப்பட்ட முறையில், தேர்தலில் வாக்களிக்கும் வயதை குறைக்கும் நடவடிக்கையை வரவேற்கிறேன்.
எனினும் இது நடைமுறைக்கு வர 75 சதவீத உறுப்பினர்கள் ஆதரவு தெரிவிக்க வேண்டும்.
வரும் மாதங்களில் வாக்கெடுப்பு நடத்தப்பட வாய்ப்பு உள்ளது.
இந்த விவகாரத்தில் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் தங்களது கருத்துக்களை தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இருப்பினும், நியூசிலாந்தின் இரண்டு முக்கிய பழமைவாத எதிர்க்கட்சிகள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.
இது குறித்து, எதிர்க்கட்சித் தலைவர் கிறிஸ்டோபர் லக்சன் செய்தியாளர்களிடம் கூறுகையில்..
"இது நாங்கள் ஆதரிக்கும் ஒன்று அல்ல. வாக்களிக்கும் வயது 18 ஆக இருப்பது சரியானது," என தெரிவித்தார்.