Breaking News

7ஆயிரம் ஹெக்டெயர் நிலத்தை முல்லைத்தீவில் அபகரிக்க முயற்சி : சாள்ஸ் எம்.பி.

7ஆயிரம் ஹெக்டெயர் நிலத்தை முல்லைத்தீவில் அபகரிக்க முயற்சி : சாள்ஸ் எம்.பி.

முல்லைத்தீவு மாவட்டத்தில் மக்களின் விவசாய மற்றும் பூர்வீக நிலங்களாகவுள்ள 7091.64 ஹெக்டெயர் நிலத்தை சுவீகரிக்கும் வர்த்தமானி அறிவித்தலை விடுப்பதற்கு வனவளத் திணைக்களம் முயற்சிக்கிறது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி.யான சாள்ஸ் நிர்மலநாதன் குற்றம் சாட்டினார். அத்துடன், இந்த நடவடிக்கையை உடனடியாக நிறுத்துமாறு வன ஜீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சர் சீ.பீ. ரத்நாயக்கவிடம் கோரிக்கை விடுத்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற, ஜனாதிபதியின் கொள்கை விளக்கவுரை மீதான மூன்றாம் நாள் சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றிய போதே இவ்வாறு கோரிக்கை விடுத்த அவர் மேலும் கூறுகையில்,

வனவளத் திணைக்களம் முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலங்களை அபகரிக்கின்ற முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.

குறிப்பாக வடக்கு, கிழக்கில் இருக்கின்ற நிலங்களைக் குறி வைத்து அரசும் வன இலாகாவும் மோசமாக செயற்படுகின்றன. இதன் ஒரு நடவடிக்கையாக வன
வளத் திணைக்களத்தால் முல்லைத்தீவு மாவட்டத் திலுள்ள துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவில் 2749. 53 ஹெக்டெயரும் கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் 2275. 61 ஹெக்டெயரும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில்1764.81 ஹெக்டெயரும் மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவில் 530.37 ஹெக்டெயரும் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் 286.74 ஹெக்டெயரும் வெலிஓயா பிரதேச செயலாளர் பிரிவில் 14.95 ஹெக்டெயரும் என மொத்தமாக 7091.64 ஹெக்டெயர் மக்களின் விவசாய நிலங்களை அவர்களின் பூர்விக நிலங்களை சுவீகரிக்க வர்த்தமானி அறிவித்தல் விட முயற்சி எடுக்கப்படுகின்றது.

எனவே, இந்த முயற்சியை உடனடியாக நிறுத்த வேண்டுமென வனஜீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சர் சீ.பீ. ரத்நாயக்கவிடம் கோரிக்கை விடுக்கின்றேன்  என்றார்.