நாட்டில் விற்பனை செய்யப்படும் டீசல் லீற்றர் ஒன்றினால் 30 ரூபா நட்டம் ஏற்படுவதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை பீப்பாய் ஒன்றுக்கு 89 டொலராக உயர்ந்துள்ளது. இது ஏழு ஆண்டுகளில் இல்லாத அளவு என்று அமைச்சர் கூறினார்.
இலங்கையின் மாதாந்த ஏற்றுமதி வருமானத்தில் மூன்றில் இரண்டு பங்கு எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு இலங்கை மாதம் 500 மில்லியன் டொலரை செலவிடுகிறது.
இதன்படி, நிலைமையின் தீவிரத்தைப் புரிந்து கொண்டு ஒட்டுமொத்த மக்களும் எரிபொருளை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்றார்.
எவ்வாறாயினும், எரிபொருள் விலையை அதிகரிப்பது தொடர்பில் இதுவரை எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், பெப்ரவரியில் குளிர்காலம் தொடங்கும் நிலையில், குளிர் நாடுகளில் எரிபொருள் தேவை அதிகரித்து வருவதால் மசகு எண்ணெய் விலை பீப்பாய்க்கு 100 டொலரை நெருங்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
டொலர் நெருக்கடி காரணமாக இந்த நிலைமை இலங்கையிலும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் மற்றும் எரிபொருள் விலையை அதிகரிக்காவிட்டால் எண்ணெய் கூட்டுத்தாபனம் வரம்பற்ற நட்டத்தை சந்திக்கும் அபாயம் உள்ளது என்றார்.