Breaking News

பிலிப்பைன்ஸில் பயங்கர நிலநடுக்கம்; இடிந்த கட்டடங்கள் - சுனாமி எச்சரிக்கை இல்லை...!!

பிலிப்பைன்ஸில் பயங்கர நிலநடுக்கம்; இடிந்த கட்டடங்கள் - சுனாமி எச்சரிக்கை இல்லை...!!

பிலிப்பைன்ஸ் நாட்டில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் கட்டடங்கள் இடிந்து விழுந்த நிலையில் இந்த நிலநடுக்கத்தால் அங்குள்ள மக்கள் பெரும் அச்சமடைந்தனர்.

பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் மண்டனொ தீவு அமைந்துள்ளது. இந்த தீவை மையமாக கொண்டு 78 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் நேரப்படி மாலை 4.14 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் தொழிற்சாலைகளின் சுவர்கள் இடிந்து விழுந்தன.

மேலும் வணிக வளாகங்களின் மேற்கூரைகள் இடிந்தன. பல கட்டடங்களில் விரிசல்கள் விழுந்தன. இதனால் பொதுமக்கள் அலறியடித்தபடி தங்களின் வீடுகள், தொழிற்சாலை, வணிகவளாகங்களில் இருந்து வெளியேறி பொதுவெளியில் தஞ்சமடைந்தனர். ஜெனரல் சாண்டோஸ் சிட்டி அருகே மரத்தொழிற்சாலை அருகே சுவர் இடிந்து விழுந்ததில் தம்பதி உடல் நசுங்கி பலியாகினர்.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.7 என்ற அளவில் பதிவாகி உள்ளது. மேலும் இந்த நிலநடுக்கத்ம் 2 முதல் 3 வினாடிகள் வரை உணரப்பட்டுள்ளது. அதோடு பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பிலிப்பைன்ஸ் நாட்டை பொறுத்தவரை நிலநடுக்கம் என்பது ஒன்றும் புதிது அல்ல இங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. இருப்பினும் இந்த நிலநடுக்கம் என்பது சக்திவாய்ந்ததாக இருந்ததால் மக்கள் அதிர்ச்சியடைந்தனர். ஆனாலும் அதிர்ஷ்டவசமாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.