Breaking News

ஆஸ்கரை கையில் ஏந்திய அந்த தருணம்; குழந்தை போல் சிரித்து மகிழ்ந்த பெள்ளி- பொம்மன்...!

ஆஸ்கரை கையில் ஏந்திய அந்த தருணம்; குழந்தை போல் சிரித்து மகிழ்ந்த பெள்ளி- பொம்மன்...!

தமிழ்நாட்டின் முதுமலை புலிகள் காப்பகத்தில் அமைந்துள்ள தெப்பக்காடு யானைகள் முகாமில் யானை பராமரிப்பாளர்களாக பணியாற்றும் பொம்மன், பெள்ளி ஆகியோரை பற்றிய 'எலிபன்ட் விஸ்பரர்ஸ்' ஆவண குறும்படம் சமீபத்தில் ஆஸ்கார் விருதை வென்றது.

தாயை பிரிந்த குட்டி யானைகளை அவர்கள் எவ்வாறு பராமரித்து வளர்த்தார்கள் என்பதும் அவர்களுக்கும் குட்டி யானைக்கும் இருந்த பாசப்பிணைப்பு என்ன என்பதும் படத்தில் இடம்பெற்று இருந்தது.

இந்த ஆவண படத்தை கார்த்திகி கொன்சால்வ்ஸ் டைரக்ட் செய்து இருந்தார். யானை குறும்படம் ஆஸ்கார் விருது பெற்றதும் பொம்மன், பெள்ளியை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னைக்கு அழைத்து பாராட்டி தலா ரூ.1 லட்சம் உதவி தொகை வழங்கினார்.

ஆவண படத்தின் இயக்குநர் கார்த்திகி கொன்சால்வ்ஸை ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசு சார்பில் ரூ.1 கோடி வழங்கினார்.

இந்த நிலையில் ஆஸ்கார் விருதுடன் பொம்மன், பெள்ளி இருக்கும் புகைப்படத்தை பிரபல ஓ.டி.டி தளம் தனது ட்விட்டர் பக்கத்தில் தற்போது வெளியிட்டு "உலகம் முழுவதும் அன்பை பரப்பும் எலிபன்ட் விஸ்பரர்சுக்கு வாழ்த்துக்கள்'' என்று பதிவையும் பகிர்ந்து உள்ளது.

இந்த புகைப்படம் வலைத்தளத்தில் வைரலாகிறது. ஆஸ்கார் விருதுக்கு இருவரும் தகுதியானவர்கள் என்று பலரும் பதிவுகள் வெளியிட்டு வாழ்த்தி வருகிறார்கள்.