இந்தியா: தமிழ்நாடு
ஈரோடு கிழக்கு எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் சமீபத்தில் நெஞ்சுவலி காரணமாக சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
அப்போது அவருக்கு லேசான கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தனியார் மருத்துவமனை தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.
ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலம் குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், தமிழ்நாட்டில் 2 மாதம் முன்பு தினசரி தொற்று 2 என்ற எண்ணிக்கையில் இருந்தது. உருமாறிய ஓமைக்ரான் வகை கொரோனா தற்போது பரவி வருகிறது. புதிய வகை கொரோனாவால் பெரியளவில் பாதிப்பு இல்லை. ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஓமைக்ரான் தொற்று ஏற்பட்டுள்ளது. தற்போது தனிமைப்படுத்தப்பட்டு நலமாக உள்ளார் என்று தெரிவித்தார்.
இந்நிலையில் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு செயற்கை ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. XBB வகை கொரோனா பாதிப்புடன் நுரையீரல் பாதிப்பும் கண்டறியப்பட்டதால் இயல்பான சுவாசம் மேற்கொள்ள முடியாமல் அவதி அடைந்ததாகவும், இரத்தத்தில் ஆக்சிஜன் அளவை சமநிலைப்படுத்த செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் இளங்கோவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.