Breaking News

“மக்களவைத் தேர்தல் முடிவுகளால் அதிமுக சோர்வடையாது” - எடப்பாடி பழனிசாமி..!!

“மக்களவைத் தேர்தல் முடிவுகளால் அதிமுக சோர்வடையாது” - எடப்பாடி பழனிசாமி..!!

இந்தியா: தமிழ்நாடு

தற்போது வெளிவந்துள்ள நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் முடிவுகள், மக்களின் ஏகோபித்த எண்ணங்களை முழுமையாக பிரதிபலிக்கும் முடிவு அல்ல. இந்தத் தேர்தல் முடிவுகள் நம்மை சோர்வடையச் செய்யாது. 2026 சட்டமன்றப் பொதுத் தேர்தலை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதற்கான பாடமும், படிப்பினையும் நமக்குக் கிடைத்திருக்கிறது. 2026 சட்டமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவோம் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

இந்தத் தேர்தலில் அதிமுக கூட்டணி ஓர் இடத்தைக் கூட கைப்பாற்றாதது கவனிக்கத்தக்கது.

இந்நிலையில் அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது...

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் முடிவுகள் நாம் எதிர்பார்த்தது போலவே அதிகார பலமும், பண பலமும், பொய்ப் பிரச்சார பலமும், அறத்துக்கு அப்பாற்பட்ட சூழ்ச்சி பலமும் மிகுந்தவர்களுக்கு சாதகமாக வந்திருக்கின்றன.

தற்போது வெளிவந்துள்ள நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் முடிவுகள், மக்களின் ஏகோபித்த எண்ணங்களை முழுமையாக பிரதிபலிக்கும் முடிவு அல்ல என்பதைத் தெரிவித்துக் கொள்வதோடு, அதிமுக வேட்பாளர்களுக்கும், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கும் வாக்களித்த வாக்காளப் பெருமக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

அதிமுகவுக்கு ஆதரவு அளித்த கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள், தோழமை இயக்கத்தினர் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகள் அனைவருக்கும் நன்றி கூறுகிறேன். “எத்தனையோ மேடு பள்ளம் வழியிலே, உன்னை இடரவைத்து, தள்ளப் பார்க்கும் குழியிலே, அத்தனையும் தாண்டி காலை முன் வையடா -நீ அஞ்சாமல் கடமையிலே கண் வையடா, சத்தியமே லட்சியமாய் கொள்ளடா” என்ற திரைப்படப் பாடல் நமக்கு என்றைக்கும் வழிகாட்டும்” என்று அவர் கூறியுள்ளார்.